நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday 30 July 2017

மணிமேகலை 17


17
ஆபுத்திரனின் உணவுக்கொடை இந்திரனின் பதவியையே கேலிக்குள்ளாக்கியது. முதலில் துணுக்குற்றாலும் இந்திரன் ஆபுத்திரனின் கருணை உள்ளத்தை வியந்தான். தனி ஒருவன் உலகைக் காக்க முற்பட்டதைப்போல ஆபுத்திரன் புறப்பட்டிருக்கிறான். அவனுடைய செயல் போற்றுதலுக்குரியது தான் . தெய்வத்தால் ஆகாததை, மெய் வருத்திக் கூலியாகப் பெற்றிருக்கிறான். அவனைப் பாராட்ட வேண்டுமென்று இந்திரன் நினைத்தான். ஆபுத்திரன் முன் தோன்றினான்.
"
நான் தேவர் தலைவன் இந்திரன்.ஆபுத்திரா! உன் செயல் பாராட்டுக்குரியது. இந்த ஊர் மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு நல் வாழ்வளித்திருக்கிறாய். சிந்தாதேவியின் மனதை கருணைக்கடலாக்கியிருக்கிறாய் . நீ உள்ள ஊர் மக்களுக்கும் உனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றாலும் அவர்களுக்காக மனம் கசிந்திருக்கிறாய். உன்னை வாழ்த்துகிறேன். உன் புண்ணியத்தின் பலனை உனக்களிக்க விரும்புகிறேன். உன் கருணைக்குப் பரிசளிக்கவே வந்தேன். உனக்கு வேண்டிய வரங்களைக் கேள். "
ஆபுத்திரன் இந்திரனை மேலும் கீழும் பார்த்தான்.

மணிமேகலை 16


16

ஆபுத்திரனின் கருணை உள்ளம் அமுதசுரபியின் வரவினால் குளிர்ந்ததைப் போல அந்த ஊர் மக்களின் வயிறும் குளிர்ந்தது. எங்கும் மக்கள் அவனை மொய்த்துக் கொண்டார்கள். அவன் பெயர் அயல் நாடுகளிலும் பரவியது. அவனை நாடிப் பலர் வந்தார்கள். அமுதசுரபியின் வற்றாத வளம் வறுமையைப் போக்கியது. பசிப்பிணி போக்கும் மருத்துவனானான். அவனுடைய புகழ் வானுலகையும் எட்டியது. இந்திரனும் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆபுத்திரனின் கருணை உள்ளத்திற்குச் சிந்தாதேவி பரிசளித்தது.
மக்கள் பசி நீங்கி ஆனந்தம் அடைந்தது. அவன் ஒரு கடவுளாகவே போற்றப்பட்டான் . ஆனால் சிறிதளவும் அவனிடம் ஆணவமில்லை. அவனிடம் என்றும் மாறாத இரக்கமே நிலைத்திருந்தது. தன்னை மக்கள் வணங்குவதை அவன் விரும்பவில்லை. அவனை வணங்கவேண்டுமென்பதற்காகவா அமுதசுரபியிலிருந்து பெருகிய உணவை அவன் வழங்கிக் கொண்டிருந்தான்? இல்லை இல்லை. எங்கும் பசி என்ற ஒரு பெருநோய் மீண்டும் தோன்றாமலிருக்கவேண்டும் என்றே அவன் பாடுபட்டுக்கொண்டிருந்தான்.
புசித்தவருக்கு எப்படிப் பசியின் கொடுமை தெரியும்? பசியின் கொடுமை பசித்தவருக்கே புரியும்!

மணிமேகலை 15


15
தன் தந்தையால் கைவிடப்பட்ட ஆபுத்திரன் அயலூர் சென்றான். அவ்வூரில் மழைபொய்த்துப் பல ஆண்டுகள் ஆகியிருந்தால், எங்கும் வெப்பம். அனல் வீசிக் கொண்டிருந்தது. பாதி மக்கள் ஊரைவிட்டு பிழைப்பதற்காக வழி தேடி வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.
உழவை நம்பியவர்கள் நிலத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் வானத்தை எதிர்பார்த்துக் கிடந்தனர். எலும்பும் தோலுமாய் இருந்தவர்களைப் பார்த்து ஆபுத்திரனுக்குக் கண்ணீர் பெருகியது. பசிப்பிணிக் கொடுமை அங்குக் கோரத் தாண்டவமாடியது. ஆபுத்திரனும் அம்மக்களோடு மக்களாய் உண்ண உணவின்றிப் பல நாள்கள் பட்டினி கிடந்தான். பட்டுப்போன மரங்களில் ஏதாவது காய்த்திருக்காதா எனத் தேடியலைந்தான்.
பசி பசி என்ன கொடிய சாபம் இஃது! இதற்கு ஏதோ ஒரு வடிவில் விமோசனம் கிடையாதா? பசியோடு உயிர்வாழ்வதை விட மாண்டுபோவது மேல். இந்தத் துன்பத்துடிப்பிற்கிடையே, ஏதோ எப்போதோ கொஞ்சம் உணவு கிடைத்தது உண்ண ஏதாவது கிடைத்தபோது ஏழை எளியவர்க்குக் கொடுத்துத் தானும் உண்டான். சில நாள்கள் பிறருக்குக் கொடுத்துவிட்டு தான் பட்டினி கிடந்தான்.