நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday 21 July 2015

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை.

தமிழ்க்குடில் அறக்கட்டளை-Thamizhkkudil Trust நடத்திய  கட்டுரைப்போட்டி

2015 அன்னையர் தின கட்டுரைப்போட்டி - முதல் பரிசு

கட்டுரைப் போட்டியின் நடுவர்கள்
1. உயர்திரு. முனைவர் க. இராமசாமி. செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக விளங்கும் முனைவர் க.இராமசாமி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் பிறந்தவர். மொழியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மொழியியல் துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். ஆங்கிலம்,இந்தி, வங்களாம், கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளை அறிந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியில் இருந்தவர். 1983 முதல் 2003 வரை மைசூர்இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில்(CIIL) துணை இயக்குநராகப் பணியாற்றியவர். மைசூரில் பணியாற்றிய காலத்தில் தமிழ்ச் சிற்றிதழ்களை ஊக்குவிக்கும் வகையில் பல தமிழ்ச் சிற்றிதழ்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு உதவியாக இருந்தவர். தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பலவகையில் பாடுபட்டுள்ளார். இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பெற்றதும் அதன் பொறுப்பு அலுவலராக இருந்து நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கப்பணிகள் பலவற்றைச் செய்து வருபவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணிகள் பலவற்றிற்குக் கால்கோள் இட்ட பெருமை முனைவர் க.இராமசாமி அவர்களுக்கு உண்டு.
2. எழுத்தாளர் திருமதி. ஷைலஜா – பெங்களூரில் வசித்துவரும் திருமதி ஷைலஜா, சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், ஓவியம், பாடகி, நடிப்பு, பிண்ணனிக் குரல், அறிவிப்பாளர் என அனைத்துத் துறையிலும் சிறந்துவிளங்குபவர்.
கனடாவிலிருந்து இணையம் வழி ஒலிபரப்பான பண்பலையில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய இவர் இதுவரை 270 சிறுகதைகள்,12 நாவல்கள்,2 குறுநாவல்கள்,5 தொடர் கட்டுரைகள்,12 வானொலிநாடகங்கள்,3 தொலைக்காட்சி நாடகங்கள் எழுதி இருக்கிறார். இன்னும் தொடர்ந்து சர்வதேச இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிவருவதோடு, விளம்பரப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் பின்னணிக் குரல் தருகிறார். எழுத்திற்காக பல விருதுகளையும் பரிசுகளையும் வென்றிருக்கும் இவரது சிறுகதைகள் சிலகன்னட மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
முதல் பரிசு பெற்றவர் : முனைவர். ஜ. பிரேமலதா, தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக்கல்லூரி, சேலம்-7 

நடுவர் குறிப்பு: இக்கட்டுரை அன்னை தொடர்பான அனைத்துக்கூறுகளையும் உள்ளடக்கி முழுமையும், தெளிவும் எளிமையும் உடையதாக அமைந்துள்ளது. கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்.

தலைப்பு                        : அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை.


ஒவ்வொரு மதத்திலும் எத்தனை கடவுளர்கள். சில மதங்கள் பெண்களை மிகுதியாகக் கடவுளாக வழிபடுகின்றன. சில மதங்களில் பெண்கள் வழிபடப்படுவதுமில்லை. இஃது அவரவர் சமய, மத உரிமை. ஆனால் எந்தச் சமயமாக, மதமாக இருப்பினும் தாயை ஒரு தெய்வமாகப் போற்றாத மதமோ சமயமோ இல்லை. உலகின் அனைத்து மதங்களும் சமயங்களும் தாயைத்தான் முதலில் போற்றுகின்றன. இவ்வாறு அனைத்து மக்களும் ஒன்றுபடும் இந்தக் கருத்தினை அனைவரும் உணர்ந்தால் உலகில் எதற்கித்தனை கடவுளர்கள்?