நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 24 September 2014

சங்க காலத்தில் போரும் அமைதியும்


சங்க காலத்தில் போரும் அமைதியும் பாகம் -1
போரை விரும்புபவர்களை ஆதரிப்பவர்களை இந்த உலகம் விரும்புமா? உண்மையில், மனிதர்களை கொன்று குவிக்கும் போரை நல்ல உள்ளம் படைத்தவர்கள்   யாரும் விரும்ப மாட்டார்கள். எனவேதான் பாரதிதாசன் ‘கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்‘ என்றார். போரில் கெடுதலைத் தவிர விளைவது எதுவுமில்லை. மக்கள் நலன் புறக்கணிக்கப்படும். மாண்டவர் தொகையோ பெருகிப்போகும். உறுப்புகள் இழந்தவர்களை எண்ணமுடியாது. தந்தை இழந்த குழந்தைகள்,கணவன் இழந்த அபலைப் பெண்கள்,மகனை இழந்த வயது முதிர்ந்தோர், உறுப்பிழந்தவர்களின் எதிர்காலப் போராட்டம் எனப் போர் திசையெங்கும் துக்கம் ஒன்றையே தந்து நிற்கும். இப்போரினால் விளைவது மனசாட்சி அழிவும், மக்கள் அழிவும் தான் வேறொன்றுமில்லை.  தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகமாக விளங்குகின்ற புறநானூறு போர் குறித்த ஒரு நூல்தான் என்றாலும், சிறந்த அறநூலாகவும் திகழ்ந்து வருகிறது. பழந்தமிழர்களின் போர்களையும், வீரத்தையும், கொடையையும், விருந்தோம்பல் பண்பையும் கூறுகின்ற நூலாக இருந்தாலும்,  சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற, மக்கள் நலனைப் பாதிக்கின்ற போரே வேண்டாம் என்று பல அறவுரைகளையும் கூறுகிறது.