நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 7 March 2013

பழந்தமிழரின் சூழலியல் சிந்தனை









பழந்தமிழரின் சூழலியல் சிந்தனை


முன்னுரை

                   நாம் வாழும் பூமி எண்ணற்ற உயிரினங்களின் இருப்பிடமாகும். இப்பூமி தோற்றம் பெற்ற நாளிலிருந்து உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தான், மிகப்பெரிய அழிவை சேதத்தைப் பூமிக்கு ஏற்படுத்தியுள்ளது. சென்ற சில நூற்றாண்டுகளில் தொழிற்புரட்சியின் பெயரால் பூமியின் வளம் பெரிதும் சூறையாடப்பட்டுள்ளது.                         பிரபஞ்சத்திலுள்ள 1235 கோள்களில் உயிரினம் வாழ்வதற்கேற்ற கோள் பூமி ஒன்றுதான். கோள்களின் தோற்றம் வயது.உயிர்ப்பு இவற்றைக் கணக்கிட்டு கிரேக்லாக் என்ற அறிஞர் பூமியின் மதிப்பு இந்தியமதிப்பில் 2இலட்சத்து16 ஆயிரம்இலட்சம் கோடி (3000டிரில்லியன் பவுண்டு)என்றும்,செவ்வாய் கோளின் விலை 7.2 இலட்சம், சூரியனின் விலை சைபருக்கும் கீழே.,வெள்ளி மற்றும் புதனின் மதிப்பு 1 ரூபாய்க்கும் குறைவு என்றும் மதிப்பிட்டுள்ளார்.இப்பூமி போல வசதியுள்ள மிகச்சிறிய விண்கலம் ஒன்றை உருவாக்குவதற்கு ரூ4320 கோடி செலவாகும் என்ற அடிப்படையில் இவ்விலையை நிர்ணயித்துள்ளார். இப்பிரபஞ்சத்தில் மிகவும் விலை அதிகமுள்ள கோள் பூமி ஒன்றுதான் என்கிறார்.(தினகரன்.2.3.11)





                           பூமி உயிரினம் வாழ்வதற்கேற்ற வகையில் உள்ளதால்தான், பூமியில் நீர் இருக்கும் காரணத்தினால்தான் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூமி எண்ணிலடங்கா உயிரினங்களின் வாழ்விடமாக இருந்தாலும், அனைத்து உயிரினங்களுக்கும் இறுதியில் தோன்றிய மனிதன் பூமியின் வளத்தைப் பாழாக்கியது போல் எந்த உயிரினமும் பாழாக்கவில்லை. பலஆண்டுகளாகவே மனிதன் தவறான நடவடிக்கைகளினால் தன் சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவித்து வருகிறான்.



தற்போது உலகை அச்சுறுத்தி வரும் சிக்கல்களில் சுற்றுச்சூழல்சார்ந்த சிக்கல்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. புவி வெப்பமடைதல்,நீர்ப்பற்றாக்குறை,சுற்றுச்சூழல் மாசுபாடின் காரணமாக ஏற்படும் நோய்கள்,அழிந்து வரும் அரிய உயிரினங்களின் நிலை, அமிலமழை ,வானிலை மாற்றங்கள்,வனப்பகுதி அழிப்பினால் ஏற்படும் நிலச்சரிவு என்று இவற்றின் பட்டியல் நீளும்.          ஆறறிவு,பகுத்தறிவு,இறை நிலை அறிவு எனப் பல அறிவு பெற்ற மனிதன் தான் அழித்த சூழலை மீண்டும் காக்க வேண்டிய கடமையும் பெற்றுள்ளான்.

           சூழலியல் குறித்த விழிப்புணர்வு 1972ம் ஆணடில் நடத்தப்பட்ட ஸ்டாக்ஹோம் மாநாடு,1982ம்ஆண்டு நடத்தப்பட்ட நைரோபி மாநாடு,ரியோடி ஜெனிரோவா மாநாடு 2002 ல் சோக்கன்ஸ்பர்க மாநாடு எனக்கூட்டப்பட்ட அனைத்துலக மாநாடுகளில் வலியுத்தப்பட்டது.


            சூழலியல் முதலில், ‘உயிரினங்கள் வாழுமிடம் பற்றிய கல்வி‘ எனப்பட்டது. தற்போது, ‘உயிரற்ற காரணிகள் உயிருள்ள காரணிகள் மீது செலுத்தும் தாக்கம் மற்றும் விளைவு‘ என வரையறுக்கப்படுகிறது.சூழல்காப்பு, சூழல்கேடு,தீர்வு,மக்கள்தொகைப்பெருக்கம், சூழல் சார்ந்த விழிப்புணர்வு இவை பற்றியே பெரிதும் தற்போது ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. தமிழ்ச் சங்க மற்றும் சங்கம் மருவிய இலக்கியங்களில் சூழல் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பழந்தமிழர் இயற்கை அறிவு


          நெருப்பின் பயனை அறிந்த நாள் முதலே சூழல் மீதான மனிதனின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. பழந்தமிழரிடையேயும் காடு கான்று நாடாக்கி வாழ்வது நாகரிகமாகக் கருதப்பட்டது. இருப்பினும், பழந்தமிழர் அழித்த காடுகளுக்குப் பதிலாகக் குளம் தொட்டு வளம் பெருக்குவதை மேன்மையான அறமாகக் கருதி இயற்கைச் சமன்மையைப் பேணிப்பாதுகாத்துள்ளனர்.இயற்கையின் பேராற்றலை உணர்ந்து அதைப் பேணிப் பாதுகாத்ததோடு, அவற்றோடு நட்பும் உறவும் பூண்டு உறவாடி மகிழ்ந்துள்ளனர்.ஆழிப்பேரலையின் அழிவைப் பலமுறை அனுபவித்திருந்தாலும் , ஐம்பூதங்களில் ஒன்றான நீரின் இன்றியமையாமை உணர்ந்து ‘நீரின்றியமையாது உலகு‘ (குறள்.20)என நீர்வளத்தின் மேன்மையுடன் பிற பூதங்களின் அவசியத்தையும் சுட்டிச் சென்றுள்ளனர்.


”மண் திணிந்த நிலனும்

நிலம் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித்தலை இய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போல”(புறம்.2)

என்ற பாடல் ஐம்பூதங்களும் மானுடத்தின் தேவைக்குப் பயன்படவேண்டும் என்கிறது.

நீரும்நிலனும்

 

             நீர் வளமே ஒரு நாட்டின் அடிப்படை வளமாகும். உலகின் முதல் உயிரி நீரிலிருந்தே தோன்றியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. நீரே புவியின் பெரும்பாலான உயிரினங்களின் வாழிடமாகவும் உணவாகவும் உள்ளது. நீருக்கும் நிலத்திற்கும் உள்ள தொடர்பானது உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு போன்றது.


             நிலம்என்பது உடம்பு. நீர் என்பது உயிர். ‘உடம்பால் அழியின் உயிரால் அழிவர் ‘என்ற திருமூலரின் கருத்து ஈண்டு நினைத்துப் பார்க்கத்தக்கது. நிலம் எனப்படும் உடம்பு அழியாமல் காக்கப்பட வேண்டுமாயின், நீர்நிலைகளான உயிரைப்பேணவேண்டும். நீர் நிலைகளைப் பாதுகாப்பது உலகையே பாதுகாப்பது ஆகும். எனதோன், பழந்தமிழர் நீரின் சிறப்பை பலவகைகளில் எடுத்துரைக்கின்றனர்.மிகினும் குறையினும், நீரும் உலகிற்குக் கேடு தரும்.


உலக நீர் ஆதாரத்தில் 97.5 சதவீதம் கடல்நீராகும் 2.5 சதவீதம் மட்டுமே நல்லநீர். பனிப்பிரதேசத்தில் உள்ள நீர் நமக்குப் பயன்படுவதில்லை.நல்ல நீர் குறைவாக இருப்பது ஒருபுறம் என்றால், நாட்டின் வறட்சி மற்றும் வெள்ளப் பெருக்கிற்காக இந்தியா போன்ற நாடுகள் மறுபுறம் பெருந்தொகையை ஒதுக்கவேண்டியுள்ளது.

             ஒரு நாட்டின் பொருளாதாரப் பின்னடைவிற்கு இதுவும் ஒரு காரணமாகும்.இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் நீர்வளத்தையாவது பேணிப்பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். எனதோன் வள்ளுவர்,அமிழ்தம் என்று மழைநீரைக் குறிப்பிடுகிறார்.


       ‘நீரான் வீறு எய்தும் விளைநிலம்‘ என நீருள்ள நிலமே சிறப்புடையது, பெருமையுடையது என இதை நான்மணிக்கடிகை கூறுகிறது.


   ‘தீமுரணிய நீரும்‘ என்ற புறநானூற்றுப் பாடல் நீர் நிலைகளைப் பெருக்கினால் புவி வெப்பமடைவதிலிருந்து தப்பிக்கலாம் என்கிறது.


          நீரின் இயல்பானது ‘குழித்துழி நிற்பது‘(நாலடியார்.31) என்பதால், அந்நீரை குழிகள்(குளம்) அமைத்துத்தேக்க வேண்டும்.


             `நீரான் அறிப மடுவினை‘ (நான்.80) என்ற பாடல் குளம் அமைத்து தேக்கும் நீர் ஓர் ஆறு உள் அடங்கும் அளவிற்கு இருக்கவேண்டும்.(நான்.54) என்றும் நீரைக் காக்க வேண்டிய வழிமுறைகளைக் கூறுகிறது.


          இதனால்,பழந்தமிழர்,குளம் தொட்டு வளம் பெருக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனார் என்பதைப் பல சங்கப்பாடல்கள் வழி அறியலாம்..“நிலன்நெளி மருங்கில் நிர்நிலை பெருகத் தட்டோர் அம்ம,இவண் தட்டோரே“(புறம்.18.27) மடு,குளம் (பெரும்.288,மதுரை.710,குறுஞ்சி.63,மலைபடு.47)


      “அறையும்பொறையும் மணந்தலைய எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரை தெண்ணீர்ச்சிறுகுளம்....”(புறம்.118) இப்பாடல் எட்டாம்நாள் தோன்றும் பிறை போன்ற வளைந்த கரையுடைய குளம்கட்டப்பட்டு வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டதைப் பற்றிக் கூறுகிறது.



‘நீர்அறம் நன்று நிழல் நன்று‘(சிறுபஞசமூலம்.61)

‘குளம்தொட்டு காவு(சோலை) பதித்து‘(64)

பாடல்வரிகள் குளம் அமைப்பதோடு சோலைகளை அமைப்பது அறச்செயல் என்கிறது.

            ‘காவோடு அறக்குளம் தொட்டல் மிக இனிது‘ என இனியவை நாற்பது(23) இதே கருத்தைக் கூறுகிறது.


           ஒருநாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் இயற்கை வளங்களைப் பேணும் தன்மையைப் பொறுத்தே உள்ளது.வளர்ச்சி என்ற பெயரில்இயற்கையைப் பாழாக்கிச் சீரழித்து உயர்வு பெற்றதாகக் கருதும் போக்கு இன்று நிலவி வருகிறது. திருப்பூரில் நடைபெற்றுவரும் தொழிற்சாலைகளின் கழிவுகளால் அழகிய கிராமமாக இருந்த திரு்பபூர் அமிலக்காடாய்க் மாறிப்போனதோடு புகழ்பெற்ற நொய்யலாறும் அழிந்துவிட்டது.





                 ”நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்              இன்னாஆம் இன்னா செயின்” (881 )

என்ற குறள் நிழலும் நீரும் முதலில் இனிமையாக இருந்து பிறகு துன்பம் தருவதாக மாறிவிடக்கூடாது என எச்சரிக்கிறது. 

 திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவு பூமிக்குள் ஊடுருவி நிலத்தையும்,நிலத்தடி நீரையும் பாழாக்கிவிட்டது. இனி புல்,பூண்டு முளைக்க முடியாத அளவு காற்றிலும் விசம் பரவியுள்ளது. இதனால் 9000 ஏக்கர் விவசாய நிலம்,185 ஊர் குடிநீர்,3500 கிணறுகள்,பாழ்பட்டு 600000 கால்நடைகள் இறந்து,600போ் மரணமடைந்துள்ளனர்.மண்ணும்,நீரும் மாசாகிவிட்டதால் பாம்புகள்.மண் புழுக்கள் உள்ளிட்ட உயிரினங்கள் காணாமல் போய்விட்டன.,(புதியதலைமுறை.10.2.11) தற்காலத்தில் அனல்மின் நிலையம்,அணுமின்நிலையம் ,நீர்மின்நிலையம் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் வெப்பமான கழிவுநீரினால் சூழல் மாசுபடுகிறது.இதற்குக் குளிர்விப்புக்குளங்களை அமைப்பதோடு சுற்றிலும் சோலைகளை ஏற்படுத்த வேண்டும் என்று சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனைப் பலநூறுஆண்டுகளுக்கு முன்னரே பழந்தமிழர் தெரிவித்துள்ளனர்.‘

           ‘நோய் இல்லாத ஆறு‘ எனப் புகழ் பெற்ற நொய்யல்ஆறு நோய் தரும் ஆறாக மாறிவிட்டது. சில ஆயிரம் பேரைக் காப்பாற்றுவது போலத் தோன்றும் ஒரு செயல், பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்குத் தீமை தருவதாக மாறினால் அஃது உண்மையான காப்பு ஆகாது என முதுமொழிக்காஞ்சி ‘மேல்வரவறியாதோன் தற்காத்தல் பொய்‘(பொய்ப்பத்து.7) என்கிறது.


  அமெரிக்காவில் பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை அழிக்கத் தெளிக்கப்பட்ட மருந்து பூச்சிகளை அடியோடு அழித்துவிட்டது. ஆனால், பூச்சிகளை உண்டு வாழும் பறவையினங்கள் பூச்சிகள் இல்லாததால் பயிர்களை முற்றிலும் அழித்து மிகப்பெரிய சேதத்தையும்பேரழிவையும் ஏற்படுத்திவிட்டன. இதனால்தான்,காரணமின்றி எவ்வுயிரையும் கொல்லக்கூடாது என்பதனை, ‘சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு‘ எனச் சான்றோர் எனப்படுவோர் காரணமின்றி ஒரு பாம்பைக்கூடக் கொல்ல மாட்டார்கள் எனப் பழமொழிநானூறு(313) கூறுகிறது. தாவர இனங்களையும் காக்க வேண்டும். விளையாட்டிற்காக் கூடச் சிறு செடியையும் தாழ்வாகக் கருதி தீங்கிழைக்கக்கூடாது. சிறு செடியே பிற்காலத்தில் வளர்ந்து யானை பிணிக்கும் மரமாகிப் பயன்படும் என்பதை, “ஆடு கோடாகி அதரிடை நின்றதூஉம் காழ் கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்.”(நாலடியார்.192.1-2) என்ற பாடல் வரிகள் தெரிவிக்கின்றன.



           ஒரிஸ்ஸாவில் பாஸ்கோ எஃகு ஆலையை நிறுவ அரசு முயற்சித்து வருகிறது.இதனால்,11.5 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால், இந்த ஆலை அமைக்க 4000 ஏக்கர் நிலம் தேவை.28 இலட்சம் மரங்கள் அழிக்கப்பட வாய்ப்புண்டு. வனங்களும் விளைநிலங்களும் அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


            ஒரு செயலால் எதிர்காலத்தில் வரும் இடையூறுகளை அறிந்து அதற்கேற்பவே அதன் பயன்களை மக்கள் பெறுமாறு செய்யவேண்டும். முன்பு நன்மை போலத் தோன்றவன பின்னர்ப் பெருந்தீமை தந்துவிடும்.

இதனை ‘ஏற்றமுடைமை எதிர்கோளினறிய (முதுமொழிக்காஞ்சி.12)என்றும்(எதிர்காலத்தி்ல் வரப் போகும் நன்மை தீமை அறிதல்)

ஒப்புரவறிதலிற் தகு வரவில்லை‘ (முதுமொழிக்காஞ்சி.5) விளைவு அறிந்து செய்வதே சிறந்த வரவு என்றும்,          ‘நன்மையும் தீமையும் நாடி ‘(குறள்) என்றும் தமிழ் இலக்கியங்கள் முன்னெச்சரிக்கை உணர்வோடு எதனையும் செய்ய வேண்டும் என்கின்றன.பகுத்தறியும் ஆற்றல் பெற்ற மனிதனே அனைத்து உயிர்களையும் காக்கும் வல்லமை படைத்தவன். ஏலாதி இத்தகுதி பற்றியே மனிதனை,‘பல்லுயிர்கும் தாயன்ன என்னத்தகும்‘ (5)எனப் போற்றுவதோடு உயிரினங்களையும், தாவரங்களையும் காரணமின்றித் துன்புறுத்தாதவன் ‘விண்ணுலகத்தேவன்‘(2)என்றும் அப்படிப்பட்டவன், ‘பிற உயிர்களைத் தானும் கொல்ல மாட்டான்,பிறர் கொல்வதற்கும் உடன்படமாட்டான்‘(8) என்றும் உயர்த்திப் பேசுகிறது.

மழைவளம்



           மரங்கள் பாதுகாக்கப்பட்டால் மாரி பொய்க்காது என்று உணர்ந்திருந்தனர். ‘நெல்லும் உயிரே நீரும் உயிரே‘ என்ற கருத்துடைய பழந்தமிழர் உழவிற்காகவும் வேள்விக்காகவும் மட்டுமே மரங்கள் வெட்டப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததினால்,வெகு சில வகை மரங்களை மட்டுமே அழித்துள்ளனர்.சந்தனம்,வகுளம்,அகில்,வேங்கை,விசை,சுரபுன்னை போன்ற மரங்கள் மட்டுமே பயிர்த்தொழில் செய்ய அழிக்கப்பட்டுள்ளன. சந்தன மரங்களைத் தினைப் புனக்காவலின் போது வெயிலில் நின்று பறவைகளை விரட்ட வேண்டிய சூழலில் வெப்பம் தவிர்க்க மேனியில் தடவி கொள்ளப் பயன்படுத்தி உள்ளனர்,

”சாந்தம் எறிந்து சாரல் சிறு தினைச்

சாந்தம் எறிந்த இதண் மிசைச் சாந்தம்

கமழக் கிளி கடியும்“(திணைமாலை நூற்றைம்பது.3.1.3)

மேலும்,பரண்களுக்குக் கால்கள் அமைக்கவும், சந்தனக் கட்டைகளை நெருப்பிலிட்டு புகையை வான்வழி செலுத்தினால் மழை வரும் என்ற நம்பிக்கையின் பொருட்டும் வெட்டியுள்ளனர்.

“புகழ்மிகு சாந்தம் எறிந்து புல்லெரியூட்டிப்

புகை கொடுக்கப் பெற்ற புலவோர்”

(திணைமாலைநூற்றைம்பது.1.1.2)

சந்தன மரங்களைக் கொண்டு யாகம் செய்தால் மழை வரும் என வேதங்களும் கூறுகின்றன.

          சந்தனம்,வகுளம்,அகில்,வேங்கை,விசை,சுரபுன்னை போன்ற மரங்கள் மட்டுமே அழிக்கப்படவேண்டும் என்பதில் மிக்கக் கவனமாய் இருந்துள்ளனர். இதைத் தவிர்த்து சுயநலத்திற்காகப் பிற மரங்களை வெட்டி அவ்விடத்தில் பயிர்த்தொழில் செய்பவர்களின் வீடுகளிலிருந்துப் பெண் எடுக்கவும் தயங்கியுள்ளனர்.


”நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை
வெறும்புதல் போல் வேண்டாது”(திணைமாலைநூற்றைம்பது 24)

என்ற பாடல் ‘சுயநலத்திற்காக மரங்களை வெட்டி அவ்விடத்தில் பயிர்த்தொழில் செய்பவர்கள் பிறர் படும் துன்பத்திற்கு வருந்த மாட்டார்கள். அவர்கள் வீட்டில் பிறக்கும் பெண்பிள்ளைகளும் பிறர்படும் துன்பத்திற்கு வருந்தமாட்டார்கள். அத்தகையோரின் பெண்ணை விரும்புவது குறித்து ஆராய்ந்து பார்‘ எனத் தோழன் ஒருவன் தலைவனுக்கு அறிவுரை கூறும் வகையில் உள்ளது.

             மரங்களை வெட்டுவதை மட்டுமின்றி, மரங்களின் நுனியைக்கூடக் கிழிப்பதை அறமன்று எனக் கருதியுள்ளதை,‘எம்நாட்டில் அற நெறித் தவறிநடப்பவர்கள் எவரும் இல்லையாதலால் கண்டல் சோலைகளில் உள்ள தாழை மரங்களின் நுனிப்பகுதிகள் முறிந்த காட்சியைக் கூட எங்கும் காணமுடியாது‘ எனத் தோழியொருத்தி தலைவனிடம் தன் நாட்டின் சிறப்பினைக் கூறுகிறாள்.


‘நெறிதிரிவார் இன்மையால் இல்லை முறிதிரிந்து

கண்டல் அம் மண் தில்லை‘(தி.மா.நூ.ஐ.61)

இதிலிருந்து பழந்தமிழர் மரக்கிளைகளின் நுனியைக் கிழிப்பதைக்கூட அறமற்ற செயலாகக் கருதியுள்ளனர்.

          நற்றிணைப் பாடலொன்றும் ஞாழல் மரத்தின் நுனியைப் பறித்துச் சிதைத்த தலைவி பற்றிக் கூறுமிடத்து, ‘தலைவனின் பிரிவுத்துயரின் காரணத்தினால் மனம் பேதலித்துத் தன்னையறியாமல் அச்செயலைச் செய்துவிட்டாள்‘ எனக்கூறுவதாக உள்ளது (106)அத்தலைவி சிறுபிரிவைக்கூடத் தாங்காதவள்.தன்மன வருத்தத்தை உடனே வெளி்படுத்தாமல் உள்ளே மனதில் புதைத்து வைத்துக்கொண்டு மறுகும் சிறுபிள்ளை போன்றவள்..அவள் சிறுமியாக இருந்தபொழுது ‘ஓரையாடல்‘ என்னும் நண்டுபிடிக்கும் விளையாட்டில் ஈடுபட்டபோது,அவளிடமிருந்து தப்பிக் கடலுக்குள் சென்ற நண்டுகளின் பிரிவைக்கூடத் தாங்காதவள்.தனக்குள் மறுகி துயருற்றவள்


.        ‘உள் ஒழிந்த வசைதீர் குறுமகள்‘ என இவளை பாடல் குறிப்பிடுகிறது.. இத்தொடர் சினம்வந்தவிடத்து மனதிற்குள்ளே வைத்து மறுகி மனஇறுக்கும் கொள்வோரை குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.விளையாடலின்போது ஏற்படும் இது போன்ற சிறுசெயல்களில்கூடப் பிரிவை விரும்பாதவள், வளர்ந்த நிலையிலும் அதே இயல்போடிருக்கிறாள். தலைவனின் பரிவைப்பற்றிக் கேட்டளவில் தனக்குள் ஏற்பட்ட மிகுதுயரை சொற்களில் வெளிப்படுத்தாமல்,ஞாழல்மரத்தின் பூக்களை உதிர்த்துச் சினத்தை வெளிப்படுத்துகிறாள்.சினத்தினால்,அறிவு மயங்கிய நிலையில் அவ்வாறு செய்துவிட்டாள் என,“அறிவுஅஞர் உறுவி ஆய்மட நிலையே”(106-9) மரங்களையும்,வனங்களையும் அழித்துப் பாழாக்கி வரும் மனிதஇனம் பழந்தமிழன் ஒரு பூவைக்கூடத் தேவையில்லாமல் பறிப்பது மடமை என்ற உணர்வோடு வாழ்ந்ததை உணர வேண்டும்.

           தமிழர் மரங்களைத் தன் சக உயிர்களாகக் கருதிய திறத்தை இவ்வாறு பல பாடல்கள் காட்டுகின்றன. அவற்றில் ஒரு பாடலில்,”உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடியலையும் ஒரு செவிலித்தாய் வழியில் தென்படும் கோங்கமரத்தைப் பார்த்து நீயும் ஒரு தாய். குலைகளை ஈன்றிருக்கிறாய். என் நிலையறிந்து மனம் நெகிழ்ந்து மொழி வழி இல்லையாயினும் உன் முள் எயிற்றால் அவள் சென்ற வழி காட்டு“ (திணைமாலை நூற்றைம்பது.65) என்கிறாள்.மரங்களுக்குப் பேசும் சக்தி இல்லை ஆனால்..உயிர் உண்டு.உணர்வு உண்டு.மனம் உண்டு. எனவே, கூர்மையான முள்ளை விரலாகக் கொண்டு அவள் சென்ற வழி காட்டு எனக் கேட்பது தாவரங்களையும் சக மனிதர்களாகக் கருதியுள்ள திறத்தைக் காட்டுகிறது. இவ்வாறு, பல்லுயிர்க்கும் பாத்து உற்றப் பாங்கறிந்து அவற்றோடு இணைந்து தம் வாழ்க்கையைத் தமிழர் அமைத்துக் கொண்டதினால் நீர் வளம் பெற்றுச் சிறப்போடு வாழும் வாழ்வையே போற்றியுள்ளனர்.

”கயம் திகழ் சோலை மலைநாடன் கேண்மை

நயம் திகழும்( ஐந்திணை ஐம்பது.5)

‘கயம் திகழ் சோலை நயம்‘ என்ற வரிகள் நீர் நிலையின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. மற்றொரு பாடல் இயற்கையைப் பேணிப் பாதுகாக்கும் மக்கள் நிறைந்த நாட்டில் அறியாமை என்பது இருக்கமுடியாது என்கிறது.

(ஐந்திணைஐம்பது.8)


       ஔவையின் .‘நாடா கொன்றோ காடா கொன்றோ ...... எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி வாழிய நிலனே ‘ என்ற பாடலும் இதே கருத்தை முன் வைக்கிறது. இவ்வாறு பழந்தமிழர் மரங்களை, நீர்நிலைகளைப் பேணிப்பாதுகாத்துச் சுற்றுச்சூழலுக்கும் உலகத்திற்கும் பெரும் தொண்டாற்றியுள்ளனர்.


     வாழிடத்திற்காக ஏரிகளையும் மரங்களையும் அழிப்பவர்கள் திரும்ப அவற்றை உருவாக்கி காப்போராகவும் இருந்திருந்தால் மகாராட்டிரா,ஆந்திரா,தமிழ்நாடு மாநிலங்கள் ஆயிரக்கணக்கான விவசாயிகளை இழந்திருக்காது.


“உண்ணக்கனி - ஒதுங்கநிழல்

உடலுக்கு மருந்து - உணர்வுக்கு விருந்து

அணையக்குடில் - அடைக்கக்கதவு

அழகுவேலி - ஆடத்தூளி

தடவத்தைலம் - தாளிக்க எண்ணெய்

எழுதக்காகிதம் - எரிக்கவிறகு”(வைரமுத்து.2004.566) எனத்தாவரங்களின் பயனைப் பட்டியலிடுகிறார் கவிஞர்.
நம் சித்தர்கள் இறைவனிடம், தா-வரம் என்க கேட்டுப்பெற்றவை தாவரங்கள் என்பர். அப்படிக் கேட்டுப்பெற்ற வரங்களை நாம் அழிக்கக் காரணமான கூறுகளுள் முக்கியமானது மக்கள் தொகைப் பெருக்கம் ஆகும்.


  இயற்கையை மனிதன் அழிப்பதற்குப்பல காரணங்கள் இருந்தாலும்,மக்கள் தொகைப் பெருக்கமே ஏரிகளையும் மரங்களையும் அழிக்க முதன்மை காரணமாகும். மக்கள் தொகைப் பெருக்கத்தினால் உணவு உற்பத்தி,வாழிடத்தேவை போன்றவற்றிற்காக இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன.அதிவேகமான மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக நீரின் அளவிலும்,(quantity) தன்மையிலும்(quality) மாற்றம் ஏற்படுகிறது.


            மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக நீர் அதிகமாகச் செலவழிக்கப்படுவது போல், கழிவுநீரும் அதிகமாக வெளிவிடப்படுகிறது.சுத்திகரிக்கப்படாத இக்கழிவு நீர் மக்கள் குடிக்கப் பயன்படும் ஆறுகளிலும்,விவசாய நீரிலும் கலக்கிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப மக்களின் வாழும் திறன் மேம்படாததே இதற்குக் காரணமாகும். சுற்றுப்புறச் சூழலை அச்சுறுத்தும் மக்கள் தொகை பெருக்கத்தை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.


        இதைக்கருத்தில் கொண்டே இன்னிலை ”ஒளிபாய் கண்ணே சீர்த்துற்று உகப்பாய் பெற்ற மகவு” (27) என்ற பாடலின் மூலம் முகத்திற்கு இரு கண்களைப் போலக் குடும்பத்திற்கு இரு மகவு போதும் என்கிறது.


          வள்ளுவரும் ‘யாழ் இனிது,குழல் இனிது‘ என்ற குறளில் யாழ் வைத்துள்ள கலைமகள் போனற மகளும், குழல் வைத்துள்ள கண்ணனை போன்ற மகனும் போதும் என்று குடும்பக் கட்டுப்பாட்டை வலியுத்துகிறார்.மக்கள் தொகை பெருக்கத்தினால் நீர்த்தேவை, வாழிடத்தேவை போன்ற காரணங்களுக்காக மரங்களை அழிப்பதால் மழை வளம் குறைந்து கடலில் உவர்ப்புத் தன்மை கூடி, உயிரினங்களுக்குப் பேரழிவு ஏற்படுகிறது. காடுகள் ஒரு பகுதியில் அதிக வெப்ப அளவைக் குறைத்தும் குறைந்த வெப்ப அளவை உயர்த்தியும் தட்ப வெப்ப நிலையைச் சீராக்குகின்றன. மழைவளம் பெருக வனம் காத்தல்,நீர் நிலைகளைப் பெருக்கல்,செயற்கை வளங்களை உண்டாக்குதல் முதலான செயல்களில் இனிவரும் காலங்களிலாவது மக்கள் ஈடுபடவேண்டும்.

பேரிடர்மேலாண்மை

  ”திரைமுதிர் அரைய தடந்தாட் தாழை ”(அகம்.131.3-5)என மற்றொரு பாடலும் தாழையின் வளைந்த தன்மையின் சிறப்பை உறுதி செய்கிறது.கடலின் அண்மையில் மட்டுமின்றி ஆற்றங்கரை ஓரங்களிலும் இச்சோலைகளை வளர்த்துள்ளனர்.

  இவவுலகம் மூன்றில் இருபங்கு கடல்நீரால் சூழப்பட்டுள்ளது.அந்நீர்நிலைமாறின் நிலப்பகுதி மிப்பெரிய பேரழிவையடையும்.கடல்சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவு எப்பேரழிவையும் விடக் கொடுமையானது. இயற்கைச் சீற்றங்களை நாம் தடுக்க இயலாது. பூகம்பத்தினால் ஏற்படும் கடல்சீற்றம், புயல் போன்றவற்றினால் ஏற்படும் கடல் சீற்றம் எனக் கடல் சீற்றங்கள் பலவகைப்பட்டதாக இருந்தாலும் இவற்றிலிருந்து ஓரளவு நம்மைக் காத்துக்கொள்ளமுடியும் என்பதைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர்.


      இலக்கியத்தைக் காக்க இலக்கணத்தைப் போற்றி வளர்த்தது போல் உலகைக் காக்க சூழல் காப்பில் கவனம் செலுத்தினர்.


   ”கடலும் கானலும் போலப் புல்லிய சொல்லும் பொருளும்”(பரிபாடல்.15.11-12) என்ற பாடல் ‘கடலும் கடற்கரைச்சோலைகளும் சொல்லும் பொருளும் போன்றன‘ என்கிறது.


   பொருளில்லாத சொல் பயனற்று, மொழிவளத்தைப் பாதித்துவிடுவது போலக் கடற்கரைச்சோலைகளில்லாத கடலும் பயனற்று ஊர்களின் வளத்திற்குப் பாதிப்பைத்தரும் என்கின்றன. பழந்தமிழர்கள், கடற்கரைச்சோலைகளின் சிறப்புணர்ந்த காரணத்தினால்தான் அச்சோலைகளிலுள்ள மரங்களில் தெய்வம் உறைவதாக் கருதி வணங்கி வழிபட்டுள்ளனர்


”தொன்று உறை கடவுள்” (அகம்.3-4)”மன்ற மராஅத்த பேசும் முதிர்கடவுள் ”(குறுந்தொகை.87.1)

”துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும்

முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ”(கலித்தொகை.101.14-15)

“நல்அரை மராஅத்த கடவுள்” (மலைபடுகடாம்.395).

“தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை

மன்றப் பெண்ணை வாங்கி மடற்குடம்பை”(நற்றிணை.303.3-5)

    இப்பாடல்கள் பழந்தமிழர், மரங்களைக் கடவுளாக வழிபட்டுப் போற்றிப் பாதுகாத்தமையைக் கூறுகின்றன. கடற்கரைச் சோலைகளில் தாழை(கைதை,கண்டல்),நெய்தல், ஞாழல்,புன்னை,பனை, அடப்பங்கொடிகள் போன்றவை ஒன்றோடொன்று இணைந்தே வளரக் கூடியன. இவை நெருங்கி வளர்வதால் அப்பகுதி கரிய சோலை போல் அடர்ந்திருக்கும்.


வெண்கோட்டு அருள் சிறைத்தா அய் கரைய

         கருங் கோட்டுப் புன்னை(67.4-6)என்ற பாடல் வெண்மையான மணல் குவிந்த கடற்கரை மேட்டில் கரிய அடிப்பகுதியையுடைய புன்னை மரங்கள் சிறை போல் எழும்பி இருக்கும் என்கிறது.


”மணி ஏர் நெய்தல் மாமலர் நிறைய

பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்

வீழ்தாழ் தாழைப் பூக்கமழ்,கானல்”(நற்றிணை.78.2-4)

”அடும்புஅமல் அடைகரை” (பதிற்றுப்பத்து.51).

”தயங்குதிரை பொருத தாழை”(குறுந்தொகை.226.5)

“தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ

படப்பை நின்ற முடத்தாட் புன்னை(அகம்.180.12-13)

தெரிஇணர் ஞாழலும் தேம்கமழ் புன்னையும்

புரி அவிழ் பூவின கைதையும்(கலி.127.1-2)

இப்பாடல்கள்,கடற்கரைச் சோலைகளில்,புன்னை மரங்களோடு,

        அடப்பங்கொடிகளும் தாழை மரங்களும் எப்பொழுதும் பிண்ணிப்பிணைந்து இணைந்தே வளர்ந்திருக்கும் என்கிறது. 


    ஆழிப்ரேலைகள் தமிழகத்தை ஏழு முறைகள் தாக்கியுள்ளதாக மாத்தளை சோமு தன் ‘வியக்கவைக்கும் தமிழகம்‘ என்ற நூலில் சுட்டுகிறார் எனவே,பெரும் பாதிப்பைப் பலமுறை சந்தித்துள்ள தமிழர் அதற்கான தீர்வும் இயற்கையே வழங்கியிருப்பதை அறிந்திருந்தனர்.ஆழிப்பேரலையினால் சிறிதும் பாதிக்கப்படாத பலஅழியா நல்ஊர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.


         தென்னிந்தியாவே அரபி,வங்க,பசுபிக் என்னும் மூன்று கடலும் சூழ்ந்துள்ள பகுதியாதலின் ஆழிப்பேரலையினால் இப்பகுதியே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும்.எனவே,இப்பகுதிகளில் இயற்கைச்சீற்றங்களை மனித ஆற்றலால் தடுக்க இயலாதபொழுது,இயற்கையே மற்றொரு வடிவத்தில் தன்னைக் காக்கும் வலிவு பெற்றிருக்கும் என்ற உணர்வோடு தமிழர் இய்றகையை உற்றுநோக்கி தாழை முதலான மரங்களின் தன்மையறிந்து அவற்றை வளர்த்துள்ளனர்.


“புதுமணற் கானல் புன்னை நுண்தாது

கொண்டல் அசைவளி தூக்கு தொறும் குருகின்

வெண்புறம் மொசிய வார்க்கும் தென்கடல்

கண்டல் வேலிய ஊர்”(நற்.74.7) .

    ‘கண்டவாயில் ‘என்னும் ஊர் ஒன்று நற்றிணைப் பாடலொன்றில் வெகுவாகச்சிறப்பிக்கப்படுகிறது.இதன்சிறப்பே ஆழிப்பேரலையினால் பாதிக்கப்படாததுதான்.இவ்வூர் உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்களையுடையது.இதன் கடற்கரையில் முற்றிய பனைமரங்கள் வெளிறிய மணல்மேட்டில் முள்வேலி அமைத்ததுபோல் காணப்படும். பனைமரங்களோடு இணைந்த ஞாழல்,தாழை ,புன்னைமரங்களும் சேர்ந்து கரிய சோலையோ என்று எண்ணும்படி அடர்ந்திருக்கும்.மணற்குன்றுகள் சூழ்ந்த இச்சோலைகளே கண்டல் வேலிகள் என அழைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் வணங்கும் தன்மையுடைய தாழையே சிறப்பாகப் பேரலைகளைத் தாக்குப்பிடிக்க வல்லது. எனவேதான், தாழை சூழ்ந்தசோலைகளை நாட்டுவேலி,பெருநீர்வேலி,கண்டல்வேலி எனப் பல பெயர்களில் அழைத்துள்ளனர்.


    இம்மரங்கள் சோலைகளில் எழும்பி நிற்கும் காட்சி மதில்கள் சூழ்ந்த அரண்மனைக் கோட்டையை ஒரு புலவருக்கு நினைவுபடுத்துகின்றது.


     ”அயில்திணி நெடுங்கதவு அமைத்து,அடைத்து அணி கொண்ட எயில் இடு களிறே போல்”(கலி.135.3-5)என்ற பாடல் வரிகள் பேரலைகளைப் போர்க்களிறுகளோடு ஒப்பிட்டு, அக்களிறுகளைத் தடுக்கும் அரண்மனைக் கோட்டைகளாகக் கடற்கரைச்சோலைகளைக் காட்டுகிறது.    ஆவேசத்துடன் பெருகிவரும் பேரலை இத்தகைய மரங்கள் சூழ்ந்தசோலைகளில் மோதியவிடத்து சிறுநுரை என மாறி இல்லாமல் போய்விடும் என்பதை, ”பெருநீர்க்கல் பொரு சிறுநுரை மெல்ல மெல்ல இல்லாகுமே”(குறுந்.290.4-6)என்ற வரிகள் காட்டுகின்றன. இவ்வாறு,பேரலை சிறுநுரையாக மாறுவதற்குத் தாழையின் மடங்கிய தன்மையே காரணம் எனப் பல பாடல்கள் சான்று தருகின்றன.. ,    "வணங்கிய தாழை”(அகம்.128.1-2)என்ற பாடல் வரிகள் காக்கும்கடல் அருள் மறந்து அழிக்கமுற்படும் போது அதன் சினத்தைத் தணிக்கத் தாழையின் மடங்கிய தன்மையாலேயே இயலும் என்று கூறுகிறது.

வையைக் கடல்


       பரிபாடல் கூறும் வையை ஆற்று வருணனையில் வையைக் கடலோடு ஒப்பிடப்படுகிறது. வையை ஆறானது பெருகி, ஊருக்குள் நுழைந்து பேரழிவை ஏற்படுத்திவிடும் என்பதால் ஆற்றங்கரைகளில் ஞாழல்,புன்னை,தாழை முதலான மரங்களை வளர்த்துள்ளனர்.இவை வளர்ந்து பெரிய சிறையின் சுவர் போல எழும்பிநிற்கும்.(பரிபாடல்.77)


  இம்மரங்களில்,ஞாழல்மரம் வலுவானதல்ல. வெள்ளநீரின் வேகத்திற்குத்தாக்குப்பிடிக்க ஞாழல்மரங்களினால் இயலாது. ஆனால்,புன்னை,தாழை இவையிரண்டும் உறுதியானவை, வலுவானவை. பேரலைகளைத் தாக்குப்பிடிக்கக்கூடியவை. கடற்கரைச்சார்ந்த பகுதிகளிலும் ஆற்றங்கரையோரங்களிலும் இத்தகைய மரங்களே வளர்க்கப்படவேண்டும்.(பரிபாடல்.12-6)என்று மரங்களின் தன்மையைப் பரிபாடல் எடுத்துரைத்து அவற்றை மிகுதியாக வளர்க்கவேண்டும் என்கிறது.தாழையின் சிறப்பை உணர்ந்ததால்தான், சிலம்புஇவ்வேலியை, ”தாழைச்சிறைசெய்வேலி”(166) என்கிறது.

   ”புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டல்”(நற்றிணை.23.9-10) வளைந்த தாழையைக் ‘கண்டல்‘ என நற்றிணைப் பாடல் கூறுகிறது. தாழை மரங்களுடன் புன்னை,ஞாழல் மரங்களும் இணைந்துவளர்ந்து நெய்தல் சார்ந்த ஊர்களைக் காத்து நிற்பதால் இவற்றைக் கண்டல் வேலிகள் எனப் பழந்தமிழர் குறித்துள்ளனர்.
 
“தெண்திரை மணிப்புறம் தைவரும் கண்டல்வேலி நும்துறை”(நற்.54.9-11)

   இவ்வாறு, கடற்கரைச்சோலைகளைக் கண்டல்வேலிகள் என்று குறிப்பிடுவதுபோல ஆழிப்ரேலையை ,‘உயர்திரை நெடுநீர்,பெருநீர், வரம்பு இல் வெள்ளம் ‘என்ற தொடர்களால் தமிழர் குறித்துள்ளனர். பதிற்றுப்பத்துஆழிப்பேரலையை,” வரம்பு இல் வெள்ளம்” (33)என்கிறது.


”உயர்திரை நெடுநீர்ப்பனித்துறை(நற்.58.9) நற்றிணைப் பாடல் ஆழிப்பேரலையை ,“உயர்திரை நெடுநீர்” என்ற தொடரால் குறிக்கிறது.

       இப்பேரலைகளைத் தாக்குப்பிடிப்பனவாதலால், கண்டல்வேலிகள் ‘பெருநீர் வேலி‘ என்றழைக்கப்பட்ட செய்தியைக் குறுந்தொகை (345.5-7)கூறுகிறது.



இப்பெரு வெள்ளமாகிய ஆழிப்பேரலையைத் தாக்குப்பிடிப்பன கண்டல் வேலிகளே என்பதை நற்றிணைப் (74)பாடலும் தெளிவாகக் கூறுகிறது.

பொதுவாக மரங்கள் மணல் அரிப்பைத் தடுக்கவல்லன.தாழையோ தன் வளையும் தன்மையால் பேரலை,பெருங்காற்றையும் தாக்கு பிடிப்பதால் அப்பகுதியில் மணல்அரிப்பு ஏற்படாததோடு அப்பகுதி உயர்ந்து மலை போல் காணப்படும்.

“குன்று போல் எக்கர்” (கலி.127).

“ஓங்கல் வெண்மணல்”(குறுந்.311)

முதலான பாடல் வரிகள் மணலைக் கடலலைகள் தொடர்ந்து கொண்டு வந்து சேர்ப்பதினால் ,மணல்மேடு தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே சென்று, அதில் உள்ள பனைமரங்களை மிகச் சிறியன எனஆக்கும்,

“அடும்பு இவர் மணற்கோடு ஊர.நெடும்பனை

குறியஆகும்”(அகம்.248.4-6)என்கின்றன.

    “ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னை”(குறுந்தொகை.311-5)உயர்ந்து கொண்டேவரும் வெண்மணலினால் உயரம் குறைந்து கொண்டே வரும் புன்னை எனக் குறுந்தொகையும் கூறுகிறது.கடலின் அண்மையில் சோலைகளைப் பாதுகாத்தது போலச் சோலையடுத்த பகுதிகளில் நாவல் முதலான மரங்களை வளர்த்துள்ளனர்.


பொங்குதிரை பொருத வார் மணல் அடைகரைப்
புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி(நற்றிணை.35.1-2) கடற்கரைச்சார்ந்த பகுதியில் ஏராளமான மர வகைகளை வளர்த்துள்ளனர்.


     எனவேதான். கண்டல்வேலிகளை உடைய ஊரில் வாழ்வோர் தம் ஊரை ,அழியாநல்ஊர், எனப் பெருமையோடு கூறிக் கொண்டுள்ளனர்.


“அழியாமரபின்நம்மூதூர்”(அகம்.311.3-5)

கண்டல் வேலி கழி நல்ஊரே”(அகம்.372.13)

அழியாத புகழை உடையது கண்டல் வேலிகளை உடைய ஊரே என்கிறது அகநானூறு.



“தாழை தைஇய தயங்கு திரைக் கொடுங்கழி

இழுமென ஒலிக்கும் ஆங்கண்

பெருநீர் வேலி எம்சிறுநல்ஊரே”(குறுந்தொகை.345.5-7)

“கடற்படப்பை நல் நாட்டுப் பொருந”(ப.ப.55.5-6)

கண்டல்வேலிகளை உடைய ஊர்களே நல்ல ஊர்கள் என்கின்றன இப்பாடல்கள்.

இவ்வாறு சிறப்பிக்கப்பட்ட ஊர்களின் பெயர்களே பிற்காலத்தில் மருவி கண்ட வாயில் என மாறிருக்கலாம்.. கண்டல் வேலி வாயில் என்பது மருவி கண்ட வாயில் என ஆகியிருக்க வாய்ப்புண்டு.

ஆழிப்பேரலையும் பெண்மை நலனும்


         “கடலன்ன காமம் உழந்தும் மடல் ஏறா பெண்ணில் பெருந்தக்ககதில்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்பவும், காதலையும் காமத்தையும் உரைத்தல் ஆடவர்க்கே உரியது என்ற பாரதியின் தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படையிலும் வாழும் ஒரு தமிழ்ப்பெண் தன் தோழியிடம் தன் நிலையை உரைக்கிறாள்.


      கரையை உடைக்கப் பெருகிவரும் காம வெள்ளத்தின் ஆற்றலை தாங்காத நிலையில் அதை உரைக்கவும் இயலாத நிலையில்,“ முட்டுவென் கொல் தாக்குவென் கொல் என் காம நோயை அறியாது துஞ்சும் ஊரை”என ஔவையின் தலைவி ஊரைச் சாடுகிறாள்.ஆனால் இந்நற்றிணைப் பாடல் காமத்தை ஆழிப்பேரலையோடு ஒப்பிட்டுப் பாடுகிறது. காமத்தினை வெளிப்படுத்த இயலாத நிலையில் ஒரு பெண்படும் பாட்டை,


“நோய் அலைக்கலங்கிய மதன் அழி பொழுதில்

காமம் செப்பல் ஆண் மகற்கு அமையும்

யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி

கைவல் கம்மியன் கவின் பெறக் கழாசு

மண்ணாப் பசுமுத்து ஏய்ப்ப குவிஅணர்ப்

பன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்

என்ன மகன் கொல்”(நற்றிணை.94.1-7)

    இப்பாடலின் பொருளானது, ‘கைத்தொழிலில் சிறந்த கம்மியன் அழகுபெறக்கழுவி தூய்மை செய்யாத முத்து தன் ஒளியை வெளியே விடாது.தனக்குள் ஒளியை மறைத்து வைத்துக்கொள்ளும்.அதுபோலத் தமிழரின் பண்பாட்டின் காரணமாக என் காமநோயை நான் மறைத்துக்கொண்டுள்ளேன்.ஆனால், என் காமமோ ஆழிப்பேரலை போன்றது.அப்பேரலையைத் தடுத்து அமைதியடையச் செய்யும் ஆற்றல் கடற்கரைச்சோலைக்கு உள்ளது போல என் காமத்தையும் அமைதியடையச் செய்யும் ஆற்றல் என் தலைவனுக்கு மட்டுமே உள்ளது‘ என்பதாகும்.


 இதிலிருந்து ஆழிப்பேரலைகளைத் தாக்குப்பிடித்து அவற்றை அமைதியடையச் செய்யும் ஆற்றல் கடற்கரைச் சோலைக்கு உண்டு என்ற செய்தியைத் தமிழர் அறிந்திருந்தனர் என்று அறியலாம்.


       இச்சோலைகள் தற்காலத்தில் அலையாத்திக் காடுகள் மற்றும் மாங்குரோவ் காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. தாழைக்குக் குமரி என்ற பெயருமுண்டு.இத்தாழை மரக் கண்டல் சோலைகள் சூழ்ந்திருந்ததால் தான் தென்னிந்தியப்பகுதிக்கு குமரி என்ற பெயரே வழங்கப்பட்டுள்ளது.


     மேலும்,இம்மரங்கள் கடற்கரைச்சார்ந்த புகுதிகளில் உள்ள புலால் நாற்றத்தைப் போக்கவும் வல்லன.ஞாழல்,புன்னை மரங்களிலிருந்து மலரும் புதிய மலர்களின் நுண்ணிய மகரந்தப்பொடி கடற்கரை எங்கும் வீசிக்கொண்டிருக்கும். இதனால் புலால் நாற்றம் நீங்கி புதுமலர்களின் மணம் காற்றில் நிறைந்து அப்பகுதி கமழ்ந்து கொண்டிருக்கும் என்கிறது கலிப்பாடல். “தேம் கமழ் புன்னை”(கலி.127.1)


இதை நற்றிணை,அகநானூறும் சிறப்பித்துப் பேசுகின்றன.

புது மணற் கானல் புன்னை நுண்தாது

கொண்டல் அசைவளி(அகம்.74.7-10)

மன்றப்புன்னை மாச்சினை நறுவீ

முன்றில் தாழையோடு கமழும்(நற்றிணை.49.8-10)

“....நறுவீ ஞாழல் மதமலர் தாஅய்


புன்னை ததைந்த வெண்மணல்”(அகநானூறு.96.1-3)

“மணி ஏர்நெய்தல் மாமலர் நிறைய

பொன்நேர நுண்தாது புன்னைதூஉம்

வீழ்தாழ் தாழைப் பூக்கமழ் கானல்”(அகம்.78)

மேற்கூறிய பாடல்கள் கடற்கரைச்சோலைகள் நாட்டைப் பாதுகாப்பது மட்டுமின்றி, அந்நாட்டைப் புலால் நாற்றத்திலிருந்தும் காக்கவல்லன என்கின்றன.

            இக்கடற்கரைச்சோலைகளில் உள்ள மரங்களின் நிழல்களில் நெய்தல் நில மகளிர் தங்கி இளைப்பாறுவதும், மீன்களை உலர்த்துவதும் உண்டு. இனிய நிழலை விரும்பி வரும் பெண்கள் வேலைமுடிந்த பின்னர் இங்குதான் ஓய்வெடுப்பர் என்கிறது ஒரு பாடல்.


....வீ உகப்

புன்னை பூத்த இன்நிழல் உயர்கரைப்

பாடு இமிழ் பனிக்கடல் நுழைஇ” (91.1-2)

         கடற்கரை பகலில் மிகுந்த வெப்பமுடையதாக இருக்கும்.கடல்நீர் சூரியனின் வெப்பத்தினால் ஆவியாகி அவ்விடத்தில் வெற்றிடம் ஏற்படும். அவ்வெற்றிடத்தை நிரப்ப கடற்கரையிலிருந்து காற்று கடலை நோக்கிச் செல்லும் இதனால் கடற்கரை பகலில் மிகுந்த வெப்பமுடையதாக இருக்கும். வியர்வை பெருகி நீர்த்தாகம் ஏற்பட்டு உடலில் வறட்சி தோன்றும்.


 

 புன்னையும் தாழையும்


        ஆனால், கடற்கரைச்சார்ந்த பகுதிகளில் வளர்க்கப்படும் சோலைகள் இக்குறையைப்போக்குகின்றன.இதன் அருமை உணர்ந்தே,அகநானூறு, ‘புன்னை பூத்த இன்நிழல்‘(91.2)என்றும் ‘வெண்மணல் ஒருசிறை புதுவது புணர்ந்த பொழிலே‘(96.1-3) என்றும் பாராட்டுகிறது.நிழலோடு நாவிற்குச் சுவையான பழங்களையும் இச்சோலைகள் தர வல்லன என்பதை,




புன்னைமரமும் பூவும்

‘அடைக்கரைப்புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி‘(நற்றிணை.35.1-2),

நீர்மலிகரகம் போல் பழம்தூங்கு முடத்தாழை‘(கலி.133-5),‘

தேம்கமழ்புன்னை(கலி.127.1-2)என்று நாவின் வறட்சியைப் போக்க இனிய பழங்களும் இச்சோலைகளின் மூலம் கிடைக்கும் எனஅறியலாம்.

முடிவுரை


            சூழலியல் என்னும் அறிவியல் துறை சார்ந்த நிபுணர்கள் தற்போது கூறும் சூழல் சார்ந்த நீர் மேலாண்மை கருத்துக்களைப் பழந்தமிழர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து அதற்கேற்ப வாழ்ந்துள்ளனர் என்பதற்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் சான்றாதாரங்களாக உள்ளன.             பழந்தமிழ் நூல்கள் பல அறங்களை வலியுத்தினாலும்,சூழல் சார்ந்து அது முன் வைக்கும் பல கருத்துகள் ‘இயற்கையோடிணைந்த வாழ்வே இனிய வாழ்வு‘ என்பதே அறங்களில் எல்லாம் முதன்மையான அறம் என்பதாக உள்ளது.பாரதிதாசன் தமிழை நோக்கி ‘நன்னிலை உனக்கெனில் எமக்கும் தாமே.நைந்தாயெனில் நைந்துபோகும்எம் வாழ்வு என்பார்.இதை இப்படியும் பொருத்திக்கொள்ளலாம்.‘நன்னிலை சுற்றுச்சூழலுக்கிருந்தால் நமக்கும் நன்னிலை.நாம் வாழும் இப்பூமி்க்கும் நன்னிலை.இல்லையேல் மானிடவாழ்வு நைந்து போகும் என்பதே நடப்பியல்உண்மை..


நன்றி.



--

கருணாநிதி.நா.(ப.ஆ) சுற்றுச்சூழல் கல்வி

பெரியார்ஈ.வெ.ரா கல்லூரி,

திருச்சி-23 7ம் பதிப்பு. 2007

சுப்ரமணியன்.ச.வே.(உ.ஆ) பதினென்கீழ்க்கணக்கு நூல்கள்மூலமும்

தெளிவுரையும்,மணிவாசகர் பதிப்பகம்,சென்னை-108.மு.ப 2010.

பாலசுப்ரமணியன்.கு.வெ.

மற்றும் பலர்(உ.ஆ) சங்க இலக்கியம்,என்.சி.பி.எச்,

சென்னை. மு.ப 2004




No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?